Thursday, December 12, 2013

“பூரணி” தோற்றம் 17-10-1913-மறைவு-17-11-2013


1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற எழுத்தாளர், பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியை தன் சொந்த பணத்தில் ஆரம்பித்து நடத்திவந்தார். பின் சொத்துக்கள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்து விட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டு தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.
ராமசாமி அய்யர் (1864ல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்த சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரியவிஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு' என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல் இறைவனிடம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துக்களும் இதை ஒட்டியேதான் இருந்தன.
1927ல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும், எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, என பதிவு ச்செய்துள்ளார். நாட்டுப்பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தனது மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதை பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக. நேர் பேச்சும் உண்டு.
‘ஸ்பேரோ' (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை' நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை' அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல் காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை'யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத்தொகுதி காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90வது வயதில் -2003ஆம் ஆண்டு- “பூரணி கவிதைகள்” நூல் ‘காலச்சுவடு' வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல் பரவலான கவனத்தையும், அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு' மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறைய பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும், என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.
“பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலறு) எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினல், மணிவாசகம் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதை தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து தன் குழந்தைகளுக்கும், பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதி கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லா படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937ல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்' இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பாரத ஜோதி' இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.
அக்கால திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுக்களாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தை கருப்பொருளாக்கினார். 1936-38 களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாக செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதி கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புக்களில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்த சொல்லை தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்' நிகழ்ச்சி 4ல் தானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.
2004ம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை'யிலும் பங்கு பெற்று பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை' இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை நான் சொல்வது உண்மைதான்' என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம் அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.
17-11-2013 (ஞாயிறு) அதிகாலை 2மணி அளவில் நிறைவாழ்வு வாழ்ந்த எனது தாயார் ‘பூரணி' என்னும் சம்பூர்ணம் அம்மாள் கைலாயப் பதவி அடைந்தார். (இந்தப்புகைப்படம் 2003இல் 'அம்பை' எடுத்தது)

16-மனக்கருவூலத்திலிருந்து

டாக்டர் வர்க்கி அம்மாள்
அவர் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் உத்தியோகம் ஏற்று தாராபுரம் வந்தபோது அவருக்கு வயது சுமார் 25க்குள்தான் இருக்கும். கேரளத்தைச் சேர்ந்தவர். நல்ல நிறம். அத்துடன் அழகும் கூட, பிறருடன் நேசமாகப் பழகும் முறையால் தனவந்தர் வீட்டுப் பெண்கள்கூட சர்க்கார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க விரும்பிவருவார்கள்.வெகு சீக்கிரத்திலேயே அவர் ஊர்க்காரர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராகிவிட்டார்.அவருடைய வீட்டில் அவரிரண்டாவது மகள். மூத்தவளுக்கு விவாகமாகி புருஷன் வீடு சென்றுவிட்டாள். தம்பிகள் இருவர். விதவைத்தாயார்.
அப்போதெல்லாம் (1940கள்) கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் ஆண்டாக்டர் ஒருவரும் பெண் டாக்டர் ஒருவரும் பணிபுரிவார்கள். ஆண் டாக்டர்  உடன் பணிசெய்யும் பெண் டாக்டரிடம் மிகவும் பண்புடனும் நேசமுடனும் பழகுவார். சில வருடங்கள் சென்றன. அந்த ஆண் டாக்டர் மாற்றலாகி வேறு ஊருக்குச்சென்றுவிட்டார். புதிதாக் ஒரு ஆண் டாக்டர் வந்தார். அவரும் நடுவயதுக்காரர்தான். குடும்பம் குழந்தைகள் எல்லாம் உண்டு. அவருக்கும் கேரளா தான். அவர் வர்க்கி டாக்டரிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும் அதனால் இருவருக்கும் சச்சரவு உண்டாவதாக ஊரில் பேச்சு அடிபட்டது. ஆண்டாக்டர் வீட்டின்மீது இரவில் கற்கள் வீசப்பட்டன.
நயம், பயம் எவற்றாலும் வசப்படாத பெண்டாக்டர் மேல் மேலிடத்துக்குப் புகார் எழுதி அவரை வேறு ஊருக்கு மாற்ற அந்த டாக்டர் செயல்பட்டார். ஆனால் ஊர் மக்கள் பெண் டாக்டரை மாற்றக்கூடாது என்று மனுஎழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பியதால் மாற்ரல் உத்திரவு ரத்தாகிவிட்டது. ஆனால் பெண்டாக்டரால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் வேலை செய்ய முடியவில்லை. ஊரில் வேண்டப்பற்றவர் களிடம் தனது நிலையை அவர் விளக்கினார். ஊர்மக்கள் ‘நீங்கள் எங்கும்போகக்கூடாது. இந்த ஊரிலேயே தனியாக ஆஸ்பத்திரி தொடங்குங்கள். நாங்கள் அதை நல்லமுறையில் கவனித்துக்கொள்வோம்' என்று உறுதி சொன்னதன் பேரில் அவர் ‘ஐடாஸ்கடர்' என்னும் பெயரில் தனி ஆஸ்பத்திரி தொடங்கினார். வேலூரில் ‘ஐடாஸ்கடர்'  என்ற பிரபல டாக்டரிடம் மருத்துவம் கற்ரவர் என்றும் தன் குருவின் பெயரை ஆஸ்பத்திரிக்கு வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆரம்பகாலத்தில் டாக்டரம்மா சாதாரணமான ஒரு வீட்டில்தான் வசித்தார். அப்போதெல்லாம் அவரிடம் கார் கிடையாது. அந்த நாட்களில் அவர் மெலிந்த உடல் கொண்டவராகத்தான் இருந்தார். பின்னர்தான் உடல் பருத்துப் போனார். வைத்தியத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வசதிக்கெற்ப குதிரை வண்டியோ, வாடகைக்காரோ கொண்டு சென்று அவரைக் கூட்டிவருவார்கள்.  சில வருடங்களுக்குப் பிறகு வர்க்கியம்மாளோடு கடோத்கஜன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் அவரது மருந்துப்பெட்டியைத் தூக்கியபடி வரத்தொடங்கினான். அவன் டாக்டரின் மெய்க்காப்பாளன்போல செயல்ப்பட்டான்.  டாக்டர் அவனை ‘சாரே' என்று அழைத்தலால் எல்லோருக்கும் அவன் ‘சாரே'தான். அவனும் ஒரு மலையாளிதான்.
ஒரு சமயம் டாக்டரம்மாவை பக்கத்து கிராமத்துப் பணக்காரர் தன் மனைவிக்கு பிரசவ வலியென்று சொல்லி கார்வைத்துக் கூட்டிச்சென்றாராம். தன் வீட்டில் ஒரு அறையைக் காட்டி உள்ளே அழைத்துப் போனாராம். முனேற்பாட்டின்படி அறையை வெளியே தாளிட்டுவிட்டு டாக்டரைக் கெடுத்துவிட்டாராம். நடந்ததை வெளியில் சொன்னால் கொலைவிழும் என்று அச்சுறுத்தி அனுப்பினாராம். அதன் பிறகுதான் டாக்டரம்மா தங்கள் ஊரான கேரளத்திலிருந்து இந்த ‘சாரே' வைத் தருவித்து உடன்வைத்துக் கொண்டாராம் இப்படி ஊரில் பேச்சு அடிபட்டது. டாக்டரம்மா கார் வாங்கியபின் ‘சாரே'தான் அதை ஓட்டுபவராகச் செயல்பட்டான்

Tuesday, December 10, 2013

15-மனக்கருவூலத்திலிருந்து

சைதாப்பேட்டையில் நான் வசித்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்கட்டிற்கு ஒரு குடும்பம் குடிவந்தது. அந்தவீட்டில் வயதான ஒரு அம்மாள் இருந்தார். தன் வயது 85என்று சொன்னார். கணவரை இழந்தவர். ஒரு தினம் என்னிடம் வந்து அமர்ந்துகொண்டு என் கையைப் பிடித்துத் தன் தலையில் மூன்று நான்கு இடங்களைத் தொடும்படி செய்தார். பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புடைத்து இருந்தது. ‘இது ஏன்?' என்று கேட்டேன், ‘அந்தக்காலத்தில் நான் என்கணவரிடம் வாங்கிய குட்டுக்கள். தொடர்ந்து குட்டுப்பட்டுப் பட்டு புடைப்புகள் நிரந்தரமாகத் தங்கிவிட்டன' என்றார். கணவனிடம் அடிபட்டிராத எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. ‘நீங்கள் என்ன குழந்தையா? ஏன் தடை செய்யாமல் ஏற்றுக்கொண்டீர்கள்' எனக் கேட்டேன்.
‘என்ன செய்வது? அவர் ஒரு ஊர்சுத்தி மனிதர். அதைப்பற்றிக்கேட்டால் அடி, உதை, குட்டு என ஆரம்பித்துவிடுவார். வயதாக ஆக எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன். அதன் பிறகுதான் வீட்டிலும் சற்று இருக்கத்தலைப் பட்டார். அதன்மூலம் நாலு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டேன்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். எனக்கு இரண்டு மூன்று நாட்கள் வயிற்றில் ஒருவிதமாக சங்கடமாகவும் அந்த அம்மாளைப் பார்க்கும்போதெல்லாம் சங்கடமாகவும் இருந்தது.

-பிளாட்டில் வசித்த காலத்தில் (1990களின் தொடக்கம்)

ரமணன் வாங்கியிருந்த பிளாட்டின் மாடியில் அவன் வீட்டுக்கு நேர் மேல் பகுதியை ஒரு குடும்பம் வாங்கி வசித்துவந்தது. அந்தப் பிளாட்டில் வசித்தவர்களில் ஆறு குடும்பத்தின் ஆண்களும் ‘ராயல் என்ஃபீல்ட் கம்பெனியில்தான் வேலை பார்த்தனர். அந்தக் குடும்பத்து ஆணும் அதில்தான் வேலை செய்தார். மற்ற இருகுடும்பத்து ஆண்கள் வேறு இடத்தில் வேலை செய்தனர்.
மாடியில் வசித்தவர் சற்று அசடு. ஆனால் மனைவி கெட்டிக்காரி. அவளும் வேலைக்குச் செல்பவள். குடும்பத்தைத் திறமையாகக் கொண்டு செலுத்துபவளாக இருந்தாள். விபரம் பற்றாத கணவனை வழிநடத்துபவளாக செயல் பட்டாள். அவர்களுக்கு ஏழுவயதில் ஒரு மகன். பாராட்டவேண்டிய விஷயம் என்றாலும் அந்த ஆணுடன் வேலை செய்யும் மற்ற ஆண்கள் கூடும்போது அந்தப்பெண்ணைப்பற்றி கேவலமாகப்பேசி தூஷிப்பதில் திருப்தி அடைவார்கள். பெண்ணின் திறமையை ஆண்களால் சகிக்க முடியுமா?
பிளாட்டின் மேற்பார்வை வருடம் ஒருவர் என்பதாக தீர்மானமாகியிருந்தது. அந்த வருடம் ரவி என்பவரின் பொறுப்பில் இருந்தது. மாடியில் வசித்தவர்களின் செருப்புகள் படிகளின் ஓரத்தில் விடப்பட்டிருந்தன. இதைச்சாக்காக வைத்து அவர் அந்தப்பெண்ணிடம் எகத்துக்கும் சத்தம்போட்டு சண்டைப்பிடித்தார். அந்தப் பெண் பின்னர் என்னிடம் “வாயாய் வார்த்தையாய் என்னிடம் சொன்னால் எடுக்க மாட்டேனா? ‘ என்று சொல்லி அழுதபோது எனக்குப் பாவமாக இருந்தது. அதே தவறு மற்ற வீட்டுப் படிகளிலும் இருந்தபோதும் அவர் அவர்களுடன் ஏன் சண்டை போடவில்லை? ‘ஏழையைக்கண்டால் மோழையும் பாயும்' என்பதுபோல அப்பாவி அகமுடையானாக இருப்பதால் இந்த மனிதருக்கு இவ்வளவு துணிச்சல்  என்று நான் எண்ணிக் கொண்டேன்.
அந்தப்பெண் இரண்டொரு மாதங்களில் உடல்நலம் குன்றி இறந்து போனாள். சாதுவாக இருந்தாலும் சம்பாதிப்பவனாக இருந்ததால் அந்த ஆளை கல்யாணத் தரகன் பசப்பி அவரின் செலவிலேயே ஒரு ஏழையான முப்பதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் எங்கோ வேலை பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டனர். அவள் தினமும் இரவில் நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவாள். மூத்தாளின் மகனை எப்போது பார்த்தாலும் ‘தேவடியா மகனே'' என்று திட்டியும் அடித்தும் கொடுமைப்படுத்துவாள். அவள் கணவர் இது தாங்காமல் முதல் மனைவியின் தாயாரை அழைத்து அவருடன் மகனை அனுப்பிக் கொடுத்துவிட்டார். சில மாதங்களிலேயே அவள் எவனுடனோ ஓடிப் போய்விட்டாள்.

Thursday, December 27, 2012

14-மனக் கருவூலத்திலிருந்து

செடி ஆசை


நான் மிகச் சிறியவளாக, நாலைந்து வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் எதிர்ச்சாரியில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடி போனது. அந்த வீட்டின் முன்புறம் கொஞ்சம் மண்தரை காலியாகவும், வீட்டின் முன்புறம் அந்தக் காலியிடத்தை வளைத்து சற்று உயரமான சுவரும் மூங்கில் கதவும் இருந்தன. என் தாய் அந்தக் காலியிடத்தில் அவரை, புடலை, பூஷிணி,பறங்கி, பீர்க்கு விதைகளை நட்டு அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றவும் சில நாட்களில் அவை முளைத்து இலைவிட ஆரம்பித்தன. இது எனக்குப் புதிய செய்தி. தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகள் அருகே சென்று அமர்ந்து கொண்டு வாஞ்சையுடன் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன். அவை வளர்வதை ஒரு அதிசயமாகப் பார்த்து மகிழ்வேன். அவற்றுக்கு சிறு சிறு பந்தல் போட்டதும் அவை பந்தலில் ஏறின.

என் அம்மா எந்தச்செடியில் எந்தக்காய் காய்க்கும் என கடையிலிருந்து வாங்கிவரும் காயைக் காட்டி விளக்குவார். வீட்டுச் செடிக்காய் சாப்பிட வேண்டும் என மிகுந்தஆசையோடு இருந்தேன். ஆனால் என் தகப்பனாருக்கு சோழவந்தானென்னும் ஊரில் வேலைகிடைத்து பழநியிலிருந்து புறப்பட நேர்ந்தது. என் ஏமாற்றமும் அழுகையும் என்தாயையும் பாதித்தது. அவர் என்னை சமாதானப்படுத்தி அந்தக் கொடிகளிலிருந்து இளந் தளிர்களைப் பறித்து கூட்டு செய்து உண்ணச்செய்தார். இன்றும் அக் கூட்டு வழக்கமான கீரைக் கூட்டைவிட ருசியாக இருந்ததாகவே தோன்றுகிறது.

பிறகு, நான் வசிக்க நேர்ந்த வீடுகள் எதிலும் செடி போட வசதி இருக்க வில்லை. ஆனால் எனக்கு செடிகளின் மீது அளவற்ற ஆசை. வாசலிலும் கொல்லையிலும் வளரும் குப்பை செடிகளைப் பார்த்து மகிழ்வேன். திருமணம் ஆனபின் கணவன் வீடுவந்து சொந்த வீடு கட்டிய பின் வாசலிலும் கொல்லையிலும் நிறையச் செடிகள் வைத்தேன். மல்லிகைப் பந்தல் நிறைய மல்லிகை மலர் பூத்துக்குலுங்கும். அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுப்பேன். கொல்லையில் பல்விமான காய்கள் ஏராளமாகக் காய்த்தன.

சொந்தவீட்டை விற்றபின் வசித்த எந்த வீட்டிலும் செடி வைக்க முடிந்த தில்லை. சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவில் ஏழு குடித்தனத்துக்கு நடுவில் குடியிருந்தபோது கொல்லையில் அடுக்கு மல்லிசெடி ஒன்றை நட்டேன். அது பூக்க ஆரம்பிக்கும் சமயம் வீடு மாற்ற நேர்ந்துவிட்டது. அந்த மல்லிகைப் பூக்களை தொடுத்து அங்கு வசித்த மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு என் பேத்தியுடன் விளையாட வந்தன. மனதில் ஒரு மெல்லிய வலி.

நங்கநல்லூரில் பிளாட்(flat) இல் வசித்தபோது (மகனின் சொந்த வீடு) வெளிச்சுவரில் காலியாக இருந்த மண்ணில் என்பேத்தியிடம் வாடிய ‘துலுக்க ஜவந்தி' பூவைக் கசக்கிக் கொடுத்து ‘அந்தக் குழியில் போட்டு தினமும் ஜலம் ஊற்றி வாருங்கள் செடி முளைத்துப் பூக்கும்' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் செய்யவும் செடி முளைத்து பூக்கவும் தொடங்கியது. அது நாள் வரை மற்றவர்களால் திரும்பியும் பார்க்கப்படாத அந்த இடம் கவனம் பெற்றது. மற்ற குடித்தன வீட்டுக் குழந்தைகள் அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டு செடிக்கு சொந்தமும் கொண்டாட ஆரம்பித்தனர். பெரியவர்களும் அதற்கு துணைப் போயினர்.
பிளாட்டை விற்றுவிட்டு சிட்லபாக்கத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிய பிறகு வீட்டை சுற்றி நிறையச் செடிகள். பலவண்ண செம்பருத்தி பூ செடிகள். ரோஜா, நித்திய மல்லி, கனகாம்பரம், நந்தியாவட்டை, துளசி போன்ற செடிகளுடன் தென்னை, கொய்யா, ரஸ்தாளி வாழை, சாதா வாழை என்று எங்கும் பசுமையாக இருந்தது. ஆனால் வருடம் செல்லச் செல்ல பராமரிப்பும் கவனமும் குறைந்து அலட்சியம் மேலிட்டது. பாம்பு நடமாட்டம் அதிகரித்து விட்டது, உதிரும் இலை தழைகளால் நடப்பது இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லி என் மகன் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டான். இப்போது மிஞ்சுவது ஓரிரு தென்னையும், ஒரு வெள்ளைப்பூ செடியும்தான்.

Wednesday, December 26, 2012

13-மனக் கருவூலத்திலிருந்து

கவலையாக இருக்கிறது

    படிக்காத பெண்கள் என்றாலும், அக்காலப் பெண்கள் ஆன்மீகம் பற்றி ஒரு தெளிவோடு இருந்தனர். அந்தக் காலத்தில் வெளிப்பார்வைக்கு ஆண் ஆதிக்கமாகத் தோன்றினாலும் மனைவியைக் கலந்து கொள்ளாமல் எதிலும் தன்னிச்சையாக முடிவு எடுத்துவிட மாட்டார்கள். வீட்டோடு இருந்து சமைத்துப் போட்டு, குழந்தைகள் பெற்றதை அக்காலப் பெண்கள் இழிவாக நினைக்க வில்லை. அது தங்களுக்கு பாதுகாப்பான, பத்திரமான இடமாகக் கருதினார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நல்லதாகவும் எடுத்துக் கொள்ளலாம், கெட்டதாகவும் எண்ணலாம். குடித்தனமோ துரைத்தனமோ எதுவானாலும் அதிகாரம் கையில் இருந்தால் அகந்தையும் சர்வாதிகார மனோபாவமும் சிறிது சிறிதாக வளர்ந்து விடுகிறது. ஆதிகாலத்தில் சமூகத்தில் பெண்களை அதிகம் மதிப்போடுதான் வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனால், காலக் கிரமத்தில் பெண்களின் அன்பும், இளகிய மனமும், பெற்றெடுத்த குழந்தை களின்மேல் அவர்களுக் கிருந்த பாசமும், தியாக மனோபாவமும், உழைப்பும் ஆண்களுக்குப் பெண்களை அடக்கி ஆளமுடியும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது. பொறுமையும், அன்புமே பெண்களுக்கு விலங்காக மாறி விட்டது.

‘ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்குக் கொண்டாட்டம்' என்னும் பழமொழிக்கு ஏற்ப, பெண்களை மட்டம் தட்டுவதும், அவர்களின் உழைப்பைக் கண்டு கொள்ளாமல் அலக்ஷியமாகப் பேசுவதும், சாத்திரத்தின் பெயரால் அவர்களின் சுதந்திரத்தையும் ஆசைகளயும் நசுக்குவதும், அவர்களை அடிமைகள் போல பாவிப்பதும் நடைமுறைக்கு வந்தது. அதிகம் சாப்பிட்டால் பெண்ணுக்கு உடல் வலிமை வந்துவிடும் என்னும் பயமும், அவளைத் தொட்டு தனக்கு செலவு அதிகம் ஆகிவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும்தான் “உண்டி சுருங்கல் பெண்டிற்கழகு” என்று சொல்ல வைத்தது. அவ்வை ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் சொன்னத்தைச் சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறாள். கூறாமல் சன்யாசம் கொள்ளச் சொன்னவளுக்கு ஏறுமாறாக இருக்கும் ஆண்களைவிட்டு விலகி சுதந்திரமாக பெண்கள் வாழவேண்டும் என்று சொல்லத் தோன்றவில்லை.

பிள்ளைப் பெறுவதை ஒரு சாக்காக வைத்து, பெண்களைப் பள்ளத்தில் இறக்கி பரிதவிக்க வைப்பதைக் கண்டு மனம் வெறுத்த பெண்கள்தான் இன்று ‘பெண்ணியம்' என்னும் புரட்சிக்கொடி தூக்கியிருக்கின்றனர். இதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும்; அதனால் ஆண்குலத்துக்கும்தானே கேடு உண்டாகும் என்று துணிந்துவிட்டனர். இப்போதெல்லாம் படிக்காத, உத்தியோகம் பார்க்காத பெண்களைக் காண்பது குறைந்து வருகிறது. ஆனாலும் நெடுநாளயப் பழக்க வழக்கங்கள் மாறாமலேயே இருக்கிறது. ஆபீஸ் போகிறவள் ஆனாலும் அகமுடையானுக்கும், மாமன் மாமிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர்க்க முடிவதில்லை. ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல, இரண்டுபங்கு வேலைகள் செய்ய நேர்கிறது. உதறவோ எதிர்த்துப் பேசவோ பெண்களால் முடிவதில்லை.

மிகவும் துணிந்த பெண்களோ ‘ஆண் பல பெண்களுடன் உறவுகொள்வது இல்லையா அது போல நாங்களும் வாழ்வோம். நாங்களும் குழந்தை பெற்றுக் கொள்வதை செயற்கை முறையில் தவிர்த்து விட்டு சுதந்திரக் காதலில் ஈடு படுவோம்' என்று கிளம்புகின்றனர். இவையெல்லாம் எங்குபோய் முடியப் போக்¢றது என்று சொல்ல முடியவில்லை பயமாக, கவலையாக இருக்கிறது.

Friday, November 23, 2012

கரும் பலகைகள்-(பூரணி கதைகள்)சிறுகதைத் தொகுதி

கரும் பலகைகள்

அது ஒரு சதுரமான ஹால். ஹாலை ஒட்டி, வலது புறம் சந்து போன்ற ஒரு அறை. எதிர் புறம் ஹாலை ஒட்டி இரு அறைகள். அந்த அறைகளில் வாத்தியாரின் குடும்பம் வாசம். ஹாலின் நான்கு மூலைகளிலும் அங்கங்கு சேர் டேபிள், பெஞ்சுகள், சுவர்களில் கரும்பலகைகள். நான்கு வகுப்புகள் அங்கு நடக்கும். அந்த வாத்தியார்தான் ஹெட் மாஸ்டர். அவரின் மனைவி நான்காம் வகுப்பு ஆசிரியை. ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு வெளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியைகள் வருவார்கள். சந்து போன்ற நீண்ட அறையில் பாலர் வகுப்பு நடக்கும். அந்த வகுப்பூக்கு ஹெட்மாஸ்டரின் மூத்த மகள் மேரி ஆசிரியை. வயது 22 இருக்கலாம். அது கிரிஸ்துவ மதத்தார் நடத்தும் பள்ளி ஆதலால் ‘பைபிள்' பாடம் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்ற மத போதனைப் படங்களும் உண்டு.

    வாத்தியாருக்கு ஆண் குழந்தை கிடையாது. இரண்டாவது மகள் ஜெசியும் மூன்றவது மகள் ரூபியும் ஹை ஸ்கூலில் படித்து வந்தனர். இரண்டாவது மகள் ஜெசியோடு அடிக்கடி ‘சிவா' என்னும் சக மாணவன் அவர்கள் வீட்டுக்கு வருவான். அந்த வாலிபன் கலகலப்பாக அவர்களோடு பழகுவான். பணக்காரப் பையன்.

    வகுப்பு நேரமாக இருந்தாலும் கூட அவன் வந்து விட்டால் மேரி உள்பட அந்தக் குடும்பமே அவனோடு பேச உட்கார்ந்துவிடும். பாடம் நடக்காது. வாத்தியார் குடும்பம் பொருளாதார வசதி குறைந்த குடும்பம். சிவா அவ்வப்போது  பொருள் உதவி செய்வான் என்று தோன்றியது. சிவா வந்தால் மேரி முகம் பூவாய் மலர்ந்துவிடும்.

    மேரிக்கு கலியாண முயற்சிகள் நடக்கலாயிற்று. முப்பது வயதுடைய தொழிலதிபர் ஒருவர் பெண் கேட்டு வந்தார். முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டுச் செத்துப் போய் விட்டதாகவும், ஆனாலும் ஆள் அம்பு நிறைய  இருப்பதால் அந்தக் குழந்தையை மேரி கவனிக்கத் தேவை இல்லை என்றும் சொன்னார்.

வாத்தியார் குடும்பத்திற்கு பூரண திருப்தி. ஆனால் மேரிக்கு விருப்பம் இல்லை. அழத் தொடங்கி விட்டாள். கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கவும் சிவாவின் வருகை அநேகமாக நின்று விட்டது.

ஒரு நாள் வாத்தியாரம்மாள் பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் “நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் முடியுமா? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை? ஏகமான சொத்து. ரூபியின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்'' என்று.

கல்யாணம் சிறப்பாக நடந்தது. சர்ச்சுக்கு நாங்கள் மாணவியர் எல்லோரும் சென்றிருந்தோம். பிறகு என் படிப்பு நின்று, கல்யாணமாகி, நான் கணவன் வீடு சென்று விட்டேன்.

சில வருடங்கள் சென்று நான் பிறந்த வீடு வந்திருந்தேன். என் பள்ளித் தோழி பட்டு என்னைக் காண வந்திருந்தாள். வாத்தியார் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தேன். பட்டு வருத்தமாகச் சொன்னாள், “பாவம், மேரி செத்துப் போய் விட்டாள். அவள் புருஷன் மிகவும் கெட்டவனாம். மூத்த மனைவியை அவன் தான் கொன்றனாம். மேரியை மிக மிகக் கொடுமைப்படுத்தி, அவள் தங்கை ரூபியையும் கெடுத்து, அடித்து இருவரையும் மிகவும் துன்பப் படுத்தினானாம். ரூபியை அவனுக்குத் தெரியாமல் யாருடனோ பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தூக்கு மாடிக் கொண்டு செத்துவிட்டாள்''.

இவைகளைக் கேள்விப்பட்டு நான் கலங்கி அப்படியே நின்று விட்டேன்.


Wednesday, September 19, 2012

12-மனக் கருவூலத்திலிருந்து

நல்ல/கெட்ட சகுனம்

    நல்ல சகுனம் பார்த்துக் காரியங்களைத் தொடங்குதல் என்பது மனதுக்கு ஒரு அமைதியை, சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அபசகுனமாகத் தான் பிறரால் உணரப்படும்போது அந்த மனம் என்னபாடு படுகிறது என்பது அந்த நிலையை அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

‘பல்லி' சகுனங்கள்

    முன்பு எப்போதோ ஒரு புத்தகம் படிக்கக் கிடைத்தது. அது பல்லி சாத்திரப் புத்தகம். படிக்க ரசமாக இருந்தது. அதில் ஒரு செய்யுள்:

முன்னாவது வலமாவது
மொழியின் திருவருளாம்
பினாவது இடமாவது
பேசும்குரல் பல்லி
சொன்னால் அதை
உமை கேளென
அரனார் மொழிகுவதால்
பொன்னாவது பொருளாவது
உயிராவது போமே
    இது தவிர, பல்லி விழுதலின் பலன், பல்லி எத்தனை முறை சப்தம் செய்கிறது என்ற எண்ணிக்கைக்குத் தக்க பலன் என்பதுபோன்ற பல விவரங்கள் செய்யுள் வடிவில் இருந்தன. ஒருநாள் என் தலையில் பல்லி விழுந்தது. பலன் பார்த்தேன். ‘தலை கலகம்' என்றும், ‘சிகை மரணம்' என்றும் எழுதியிருந்தது. சிகையில்லாமல் தலை இருக்கமுடியுமா? என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். எதுமே நிகழவில்லை. பல்லிகள் வலப்புறச் சுவரில் அமர்ந் திருக்கும்போது சப்தமிட்டுவிட்டு இடப்புற சுவருக்கு நகர்ந்தும் சப்தமிடுகின்றன. ஒரே நாளில் சில மணி இடைவெளிகளில் சப்தமிடுகிறது. இதில் எதை எடுத்துக் கொள்வது? ஆக, இந்தப் பல்லி ஜோசியம் குழந்தைகள் விளையாட்டு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    ஒரு முறை நான் பூக்காரியைக் கூப்பிட்டுப் பூ வாங்கினேன். என் மறுமகள் அந்தப் பூச்சரம் முழுவதையும் சுவாமி படத்திற்கு சாற்றி விட்டாள். நான், ‘நீ ஏன் பூ வைத்துக் கொள்ளவில்லை?' என்று வினவினேன். ‘நீங்கள் விதவைப் பெண்ணிடம் பூ வாங்கினீர்கள். அவள் எதிரில் அதைச் சொல்ல முடியாமல் பேசாதிருந்தேன். சுமங்கலிகள் விதவையிடம் பூவாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது அல்லவா?' என்று பதில் சொன்னாள் மறுமகள். எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கணவனை இழந்த ஒரு பெண் ஒரு தொழில் செய்துகூடப் பிழைக்க முடியாதா? என்ற எண்னமும், நாம் இவ்வாறான பெண்களிடம் தானே பூ வாங்கி வைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லையே! இந்தக் கிழவயதிலும் சுமங்கலியாகத்தானே இருக்கிறோம் என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மகனும் மறுமகளும் சம்பளம் வாங்கி வந்தால் என் கணவரையும் என்னையும் சேர்த்து நிற்கவைத்து தட்டில் சம்பளப் பணத்தை வைத்து எங்களிடம் கொடுத்து நமஸ்காரம்செய்து, பின் அதை வாங்கிக் கொள்வார்கள். என் கணவர் சற்று மூளைக் கலக்கமாக இருந்தார். தட்டில் இருக்கும் பணக் கட்டை எடுத்து எண்ணத் தொடங்கிவிடுவார். கடை முதலாளியாய் இருந்த போது பணம் புழங்கிய பழக்க தோஷம். என் மகன் அவர் கையிலிருந்து அதை வெடுக் என்று பிடுங்கிக் கொள்வான். நான் மனதிற்குள் ‘எண்ணிப்பார்க்க அனுமதித்தால்தான் என்ன? பணத்தைத் தின்றா விடுவார்?' என்று சிரித்துக் கொள்வேன். அவர் காலமான பிறகு அந்த நாடக அரங்கேற்றம் நின்று விட்டது.

    சாதாரணமாக சகுனம் பார்ப்பவர்களும் கூட, பெற்ற தாயிடம் சகுனம் பார்க்கக் கூடாது என்பதாக சாத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டின் சுபகாரியங்களின் துவக்கத்தில் மஞ்சள் பூசிய இரண்டு தேங்காய் களை விதவையானாலும் தாயாரிடம் கொடுத்து நமஸ்கரித்து வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனாலும் சகுன நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவ்விடத்திலும் சகுனம் பார்க்கத் தோன்றிவிடுகிறது.