Thursday, November 8, 2007

06-மனக் கருவூலத்திலிருந்து

கால மாற்றம்

ஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர் களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறு விதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக் கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெரியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு, வறுமையிலும்கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தினார்கள்.
அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, ஓகாதலுக்கு வழிவைத்து கருப்பத்துக்கு தடை வைத்துஔ என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது.
ஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்கமுடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத் தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு.
அன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழுமனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.
இதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக் குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுர வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல.
 முப்பது வயதிற்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.

05-மனக்கருவூலத்திலிருந்து

முதுமை

'தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு' என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர்களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப் பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.
உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பதுதான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறை களை வகுத்துக் கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது. பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

வாய்விட்டுச் சொல்ல மனித நாகரீகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமானபின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்தியிருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்துவந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப் பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதிபோல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்பு கிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, 'கிரைண்டர்' போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்லமுடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய் விடுகிறது. ஆணும் பெண்னும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத் திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது.

இதுபோன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகி வருகிறது.