Wednesday, December 26, 2012

13-மனக் கருவூலத்திலிருந்து

கவலையாக இருக்கிறது

    படிக்காத பெண்கள் என்றாலும், அக்காலப் பெண்கள் ஆன்மீகம் பற்றி ஒரு தெளிவோடு இருந்தனர். அந்தக் காலத்தில் வெளிப்பார்வைக்கு ஆண் ஆதிக்கமாகத் தோன்றினாலும் மனைவியைக் கலந்து கொள்ளாமல் எதிலும் தன்னிச்சையாக முடிவு எடுத்துவிட மாட்டார்கள். வீட்டோடு இருந்து சமைத்துப் போட்டு, குழந்தைகள் பெற்றதை அக்காலப் பெண்கள் இழிவாக நினைக்க வில்லை. அது தங்களுக்கு பாதுகாப்பான, பத்திரமான இடமாகக் கருதினார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நல்லதாகவும் எடுத்துக் கொள்ளலாம், கெட்டதாகவும் எண்ணலாம். குடித்தனமோ துரைத்தனமோ எதுவானாலும் அதிகாரம் கையில் இருந்தால் அகந்தையும் சர்வாதிகார மனோபாவமும் சிறிது சிறிதாக வளர்ந்து விடுகிறது. ஆதிகாலத்தில் சமூகத்தில் பெண்களை அதிகம் மதிப்போடுதான் வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனால், காலக் கிரமத்தில் பெண்களின் அன்பும், இளகிய மனமும், பெற்றெடுத்த குழந்தை களின்மேல் அவர்களுக் கிருந்த பாசமும், தியாக மனோபாவமும், உழைப்பும் ஆண்களுக்குப் பெண்களை அடக்கி ஆளமுடியும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது. பொறுமையும், அன்புமே பெண்களுக்கு விலங்காக மாறி விட்டது.

‘ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்குக் கொண்டாட்டம்' என்னும் பழமொழிக்கு ஏற்ப, பெண்களை மட்டம் தட்டுவதும், அவர்களின் உழைப்பைக் கண்டு கொள்ளாமல் அலக்ஷியமாகப் பேசுவதும், சாத்திரத்தின் பெயரால் அவர்களின் சுதந்திரத்தையும் ஆசைகளயும் நசுக்குவதும், அவர்களை அடிமைகள் போல பாவிப்பதும் நடைமுறைக்கு வந்தது. அதிகம் சாப்பிட்டால் பெண்ணுக்கு உடல் வலிமை வந்துவிடும் என்னும் பயமும், அவளைத் தொட்டு தனக்கு செலவு அதிகம் ஆகிவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும்தான் “உண்டி சுருங்கல் பெண்டிற்கழகு” என்று சொல்ல வைத்தது. அவ்வை ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் சொன்னத்தைச் சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறாள். கூறாமல் சன்யாசம் கொள்ளச் சொன்னவளுக்கு ஏறுமாறாக இருக்கும் ஆண்களைவிட்டு விலகி சுதந்திரமாக பெண்கள் வாழவேண்டும் என்று சொல்லத் தோன்றவில்லை.

பிள்ளைப் பெறுவதை ஒரு சாக்காக வைத்து, பெண்களைப் பள்ளத்தில் இறக்கி பரிதவிக்க வைப்பதைக் கண்டு மனம் வெறுத்த பெண்கள்தான் இன்று ‘பெண்ணியம்' என்னும் புரட்சிக்கொடி தூக்கியிருக்கின்றனர். இதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும்; அதனால் ஆண்குலத்துக்கும்தானே கேடு உண்டாகும் என்று துணிந்துவிட்டனர். இப்போதெல்லாம் படிக்காத, உத்தியோகம் பார்க்காத பெண்களைக் காண்பது குறைந்து வருகிறது. ஆனாலும் நெடுநாளயப் பழக்க வழக்கங்கள் மாறாமலேயே இருக்கிறது. ஆபீஸ் போகிறவள் ஆனாலும் அகமுடையானுக்கும், மாமன் மாமிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர்க்க முடிவதில்லை. ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல, இரண்டுபங்கு வேலைகள் செய்ய நேர்கிறது. உதறவோ எதிர்த்துப் பேசவோ பெண்களால் முடிவதில்லை.

மிகவும் துணிந்த பெண்களோ ‘ஆண் பல பெண்களுடன் உறவுகொள்வது இல்லையா அது போல நாங்களும் வாழ்வோம். நாங்களும் குழந்தை பெற்றுக் கொள்வதை செயற்கை முறையில் தவிர்த்து விட்டு சுதந்திரக் காதலில் ஈடு படுவோம்' என்று கிளம்புகின்றனர். இவையெல்லாம் எங்குபோய் முடியப் போக்¢றது என்று சொல்ல முடியவில்லை பயமாக, கவலையாக இருக்கிறது.

No comments: